வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

🕔 August 8, 2023

– பாறுக் ஷிஹான் –

வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து திரிவதாக தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.

வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பொற்று சென்றுள்ள பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரணங்கள் (10000 ரூபாய் பெறுமதியான பொதி) கொடுக்கப்படும் எனத் தெரிவித்து, இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கபப்பட்டிருந்தன.

பின்னர் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என கூறி, தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச்சிங்கள மொழி மூல விண்ணப்பப படிவங்களை சில அலுவலகர்கள் வழங்கி உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டும் என வற்புறுத்துவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்