சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

🕔 August 8, 2023

பிரி – 6 (PT-6) ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் 1961 இல் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றில் இன்று (8) தெரிவித்தார்.

இந்த பழைய விமானங்களை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நியாயமற்றது என்றும் வருந்தத்தக்கது எனவும் குறிப்பிட்ட அவர், அவற்றை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றார்.

அரசாங்கம் கிபிர் போர் விமானங்களின் பழுதுபார்க்கும் பணிக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாவும், PT-6 விமானத்துக்கு 0.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

”இந்த நியாயமற்ற மற்றும் வருந்தத்தக்க சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்பது” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விமானப்படைக்குச் சொந்தமான PT-6 ரக விமானம் நேற்று நேற்று திருகோணமலை – சீனன்குடாவில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட போது விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு பயிற்றுவிப்பாளரும், பயிற்சி பெறுபவரும் பலியாகினர்.

தொடர்பான செய்தி: சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்