வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான சுமந்திரனின் கருத்து, தமிழர்களுக்கான ஐ.நா. விசாரணையை தரம்புரள வைத்துள்ளது; பிரபா கணேசன்

🕔 November 5, 2015

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தPraba ganesan - 0197 கருத்தினால், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரமானது, ஐ.நா. விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எற்படுத்தியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா. விசாரனை தடம்புரள வழி வகுத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயங்களைத் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது இன சுத்திகரிப்பு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது பிழையான கருத்தாகும். இதனை அவர் கூறுவதன் மூலமாக, தன்னை தானே சிலருக்காக சுத்திகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிகள் வெளியேற்றப்பட்டமையை ஒரு போதும் நியாயப்படுத்தி விட முடியாது. இருப்பினும் அன்றைய யுத்த கால தமிழ் தேசிய போராட்டத்தின் காலத்தின் கட்டாயமாக இந்நிகழ்வு இடம்பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

வடக்கில் வாழும் முஸ்லிம் மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்பு அவர்களது நிலங்களை விடுதலைப் புலிகள் அபகரித்து தமிழர்களுக்கு தாரை வார்க்கவில்லை. அதே போல் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேறியதன் காரணமாக யுத்தத்தின் மூலமான நேரடி தாக்குதல்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கூடியதாக இருந்தது. முஸ்லிம் மக்களின் உயிரிழப்புகள் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் இனத்தை அடக்கி ஆளும் சிங்கள அரசாங்கத்தின் ராணுவதிற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டத்தின் போது, இப்படியான சில எதிர்மறை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இன்று தன்னை வெகு சுத்தமான மனிதனாக காட்டிக் கொள்வதற்காக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன சுத்திகரிப்பு என்று சொல்லும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப் புலிகள் இன்றும் இருப்பார்களேயாயின் வாய் திறந்து தைரியமாக பேசுவாரா? இதனைப் பார்க்கும் பொழுது இவரை விட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேர்மையான மனிதராக தெரிகின்றார்.

இன்று இவ்விடயம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவரது கூற்றை கடுமையாக எதிர்க்கின்றார்கள் என்று தெரிந்தும், இவர் இதனை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் சர்வதேசத்திற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்திற்கும் ஆட முயற்சிக்கின்றார்.

முஸ்லிம் மக்களின் நியாயமான உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களது உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது அதற்கு நாங்கள் துணை நிற்க தயாராக இருக்கின்றோம். அதேநேரத்தில் எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் எந்த அளவு எமக்கு உறுதுணையாக நின்றார்கள் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

 

சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மூலமாக, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையினை ஐ.நா விசாரனை பொறிமுறையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா விசாரனை தடம்புரள வழிவகுத்துள்ளது.’ என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்