தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம்
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, பிரபல சமூக செயற்பாட்டாளர் வடிவேல் பரமசிங்கம் இன்று நடந்த வாகன விபத்தில் சிக்கி மரணமானார்.
தம்பிலுவிலில் பிறந்து தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல் பரமசிங்கம் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவராவார்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த கனரக வாகனமும் இன்று (29) அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பிரயாணித்த வடிவேல் பரமசிங்கம் உயிரிழந்தார்.
இதில் படுகாயமடைந்த வேன் சாரதி – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.