வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

🕔 October 25, 2015

Maskeliya - 05
– க. கிஷாந்தன் –

ஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,   நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த சில மாதங்களாக நாடு பூராகவும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இதன் காரணமாக மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை நான் நேரடியாக சில இடங்களுக்கு விஜயம் செய்து பார்த்த பொழுது, முறையான வடிகான் வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே வெள்ளபெருக்கு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அங்கு உரியவர்களிடம் கலந்துரையானேன். சட்ட விரோத கட்டிடங்கள் வடிகான்கள் ஊடாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே, தாங்கள் கடந்த பல வருடங்களாக இவ்வாறு பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்த விடயம் குறித்து,  நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், வடிகான்களை சீராக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளேன்” என்றார்.

அத்தோடு, வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் திகாம்பரம் நாடு திரும்பியதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பில் பேசி,  நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்களையும், உபகரணங்களையும் வழங்குவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.Maskeliya - 04
Maskeliya - 02Maskeliya - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்