பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையின் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு
கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சபைகளின் நிருவாகத்தில் தலையீடு செய்தல், முன்னைய பதவி வழியாக அதிகாரத்தை நிலைநிறுத்த
முற்படுதல் என்பவற்றை முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று பதவிழந்த உறுப்பினர்களுடன் எந்தவகையான தொடர்புகளையும் அதிகாரிகள் வைத்துக்கொள்ளக் கூடாது என, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகமானது, மாகாண சபைகளின் நிருவாகத்துக்கு உட்பட்டதாக இருந்தபோதிலும், பதவியிழந்த தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் தலையீடுகள் மறைமுமாக உள்ளுராட்சி சபைகளின் தற்போதைய நிர்வாகத்தில் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த செயற்பாடு தொடர்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு விசேட சுற்றறிக்கை மூலம் மேற்படி அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
பதவியிழந்த உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், இவர்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு சென்று தமது பதவிக்காலத்தில் மீதமாகவிருந்த பணிகளை நிறைவேற்ற முற்படுவதோடு, தேர்தல் நடைபெறும்போது தாங்கள் மீண்டும் அதே பதவிக்கு வருவோம் எனக் கூறி, உள்ளூராட்சி சபைகளில் கடமைபுரியும் அதிகாரிகளை மிரட்டி காரியங்களை சாதிக்க முற்படுவதாக அமைச்சுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த சுற்றறிக்கையினை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.