
மெதிரிகிரியவிலுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர், பரீட்சை நிலையத்தில், அவர்களின் பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலையின் அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராகொட கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்தார்.
பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் குழுவொன்று பரிசோதனை மேற்கொண்டு, மேற்பார்வையாளரையும் ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை நிலையப் பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக பணிப்பாளர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் முடிவுகள் வெளியானதும், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



