பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஊடகவியலாளரான பெட்ரோ லஸ்லா என்பவரால், ஒசாமா அப்துல் என்ற அகதி, காலால் தடுக்கி விடப்பட்டு கீழே விழ வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் ஊடகவியலாளரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது.
பெண் ஊடகவியலாளரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசாமா அப்துல், சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்கிற விடயம் தெரிய வந்தது. இவருக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். இதில் 18 வயது மூத்த மகன் முகமது, ஏற்கனவே ஜெர்மனி நாட்டில் குடியேறி விட்டார்.
இதையடுத்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரிலுள்ள ‘கெனாஃபே’ கால்பந்து அகாடமியானது, சிரிய அகதியான ஒசாமா அப்துலை, கால்பந்து பயிற்சியாளர் பதவியில் அமர்த்த முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒசாமா அப்துல், கடந்த புதன்கிழமையிரவு ரயிலில் ஜெர்மனி வழியாக மாட்ரிட் நகர் வந்தடைந்தார். மாட்ரிட்டின் புறநகர் பகுதியான கெடாஃபேவில் அவருக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றும் வழங்கப்பட்டது.
ஊடகவியலாளரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒசாமா அப்துல் கூறுகையில், ”அந்த சம்பவம் மிக மோசமானது. அந்த பெண் இடறியதும், எனது கையில் இருந்த 7 வயது மகன் சையதுடன் கீழே விழுந்தேன். எனது மகனை அந்த சம்பவம் மிகவும் பாதித்தது. 02 மணி நேரத்திற்கும் மேலாக அவன் அழுது கொண்டேயிருந்தான். சிரியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தது மறுஜென்மம் எடுத்தது போல உணர்ந்துள்ளேன் ” என்றார்.