தலைப்புச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் சட்ட விரோத பி.எம்.டப்ளியு வாகன விவகாரம்: நாளை சிஐடிக்கு செல்வதாக நீதிமன்றில் அறிவிப்பு

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட , முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் – சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்துப் பொருத்தப்பட்ட சொகுசு கார் தொடர்பில், நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் பி.எம்.டப்ளியு (BMW) என அடையாளம் காணப்பட்ட சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்க்கப்பட்ட சொகுசு வாகனம், அண்மையில் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்டது.

ஹோட்டல் வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

WP C 24-0430 என்ற இலக்கத் தகடு கொண்ட கறுப்பு நிற பி.எம்.டப்ளியு, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, காமினி அபேரத்ன என்ற நபரால் நிறுத்தப்பட்டதாக ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விசாரணைகளின் போது, ​​ அந்த வாகனம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு சொந்தமானது எனவும், வாகனம் பின்னர் பெற்றுக் கொள்ளப்படும் எனக் கூறி – அங்கு நிறுத்தப்படடதாகவும் காமினி அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், சோதனையின் போது – குறித்த பி.எம்.டப்ளியு வாகனத்துக்குள் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்குச் சொந்தமான பல ஆவணங்கள் காணப்பட்டதாகவும் ஆனால் வாகனத்தின் பதிவு தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

வாகனத்தின் கேரேஜ் இலக்கத்தை (garage number) வைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், நாவல பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பெயரில் இலக்கத் தகடு பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தின் இலக்கத் தகட்டை இந்த வருடம் மார்ச் மாதம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் அது நிறுவனத்திற்கு சொந்தமான வானொலி நிலையத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனத்தின் சேஸ் இலக்கமான WBA5E52010G115194 ஐ இலங்கை சுங்கப் பிரிவினர் பரிசோதித்ததில், மேற்படி சேஸ்ஸுடன் கூடிய வாகனம் சட்டப்பூர்வமாக இலங்கைக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்டதன் பின்னர், குறித்த வாகனம் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரியவந்தது.

நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்தமை, பதிவு செய்யப்படாத வாகனத்தைப் பயன்படுத்தியமை, திருடப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியமை மற்றும் திருடப்பட்ட இலக்கத் தகடு உள்ள வாகனத்தைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.