கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

🕔 June 14, 2023

– புதிது செய்தியாளர் –

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார்.

ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட ஏ.பி. மதன், ‘தமிழ் மிரர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து சுய விருப்பத்தின் பேரில் விலகி, தனது சொந்த ஊரில் – முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஊடகத்துறையில் நுழையும் ஆர்வத்துடன் இருந்த பலருக்கு எழுதுவதற்கான சந்தர்ப்பங்களை- இன, மத பாகுபாடுகளின்றிதான் ஊடகவியலாளராக செயற்பட்ட காலங்களில் மதன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – பளையினை சொந்த இடமாகக் கொண்ட மதன், நேர்மையான ஓர் ஊடகவியலாளராக இன்றும் அறியப்படுகின்றார்.

புதிய சிந்தனைகளையும் முற்போக்கான செயற்பாடுகளையும் கொண்ட மதன் – கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேற்படுத்துவார் எனும் எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்