தலைப்புச் செய்திகள்

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகளை கணக்காய்வு செய்ய, ஜனாதிபதியின் மேற்பார்வையில் குழு நியமனம்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், கணக்காய்வுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களில் 2023 முதல் 2026 வரையிலான காலகட்டங்களுக்கான கணக்காய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நொர்வூட் மற்றும் தலவாக்கல பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகளில் விசேட கவனம் செலுத்தப்படும்.

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதையும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது சமுர்த்தி திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 5,000 உதவித்தொகை குறித்தும் இந்தத் கணக்காய்வுக் குழு ஆய்வு செய்யவுள்ளது.

மேலும், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அரச மானியங்கள் மற்றும் படிகள் உரியவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டதா என்பதையும் இக்குழு விசாரிக்கும்.

கணக்காய்வு தொடங்குவதற்கு முன்னர், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து தங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால், அதைத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி பயனாளிகளைக் கேட்டுக்கொண்டார்.