அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

🕔 July 15, 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின.

ஆனால், எந்தக் கட்சிக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்தக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அந்தக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் இரண்டு கட்சிகளும்இணைந்து ஆட்சியமைத்தன. எந்தக் கட்சி வென்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்கும் என்று கூறப்பட்டது. விரும்பியோ விரும்பாமலோ இரண்டு கட்சிகளும் சேர்ந்தே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

ஆனால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு எதிராக நாட்டில் எதிர்ப்புகளும் உள்ளன.

பௌத்த பீடங்கள் கூட எதிர்க்கின்றன. மக்கள் ஆணை இல்லாத ஒரு வேலையைச் செய்யப்போனால் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் வரவே செய்யும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்