பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

🕔 December 31, 2016

Champika ranawaka - 01டக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் கோவில்கள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன் கோவில் அண்மையில் 05 மடங்கு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் இதுவரை வாய்திறக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாட்டில் சுமார் மூன்று லட்சம் தொல்பொருள் இடங்கள் உள்ளன என்றும், இவற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய 12 ஆயிரம் இடங்கள் காணப்படுகின்றன.

தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆளணி மிகவும் மந்த கதியில் இயங்குகின்றது. அதன் காரணமாக தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளன.

உதாரணமாக பிரித்தானியரின் ஆட்சியின்போது டேவி என்பவர் வெளியிட்ட ‘நினைவுகள்’ என்ற நூலில், ருவன்வெலிசாய தூபி ஒரு பாரிய மலையைப் போன்றே காட்சியளித்ததாக கூறியுள்ளார்.

எமக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து அபேகிரிய தொல்பொருட் சின்னமும் பற்றையினால் சூழப்பட்ட மலையைப் போன்றே காட்சியளிக்கிறது.

அதேபோல வடக்கு, கிழக்கு பகுதிகளில் காடுமண்டிய மலையைப் போன்று பல்வேறு இடங்களில் தூபிகள் காணப்படுகின்றன. இதுகுறித்து தெரியாதவர்கள் அதன் மீது விவசாயத்தையும், வீடு கட்டுதலையும் செய்கின்றனர்.

அந்த நடவடிக்கைகளில் புராதன சின்னங்களின் கற்கள் தென்பட்டால் அதனை யாரிடமும் கூறாமல் ரகசியமாக அகற்றுகின்றனர். எனவே மதத் தலங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மாணித்துள்ளனர்.

உதாரணமாக திருகோணமலையில் இருந்ததைப் பார்க்கிலும் 05 மடங்கு அதிகமாக விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளனது.

அதேபோன்று புதிய கோவில்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலங்களும் மட்டக்களப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

எனவே 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலும், யுத்தத்துக்குப் பின்னரும் – வடக்கு, கிழக்கு பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் அதன் விஸ்தரிப்பு தொடர்பாக கணக்கெடுப்பை மதவிவகார அமைச்சுக்கள் நடத்தி போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை தோற்கடிப்பதற்கு இணங்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே, வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது குற்றம் சுமத்தினார்.

2013ம் ஆண்டில் வடமாகாண சபையை அமைப்பதற்கு முன்னர், மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் தான்தோன்றித் தனமாக புறக்கணித்தார்.

நாங்கள் மட்டுமல்ல, இன்று மஹிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்திருக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் இந்த விடயத்தில் குற்றவாளிகள்தான்.

மாகாண சபையை மாற்றியமைக்கும் சிறப்பான சந்தர்ப்பத்தை அன்று நாங்கள் நழுவவிட்டதன் விளைவாக, வடக்கு மக்களை மீண்டும் இனவாதத்துக்கு இட்டுச் செல்லும் இனவாதியான விக்கேஸ்வரனைப் போன்ற ஒருவர் தெரிவாவதற்கு காரணமாகி விட்டோம்.

இதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், விசேடமாக பசில் ராஜபக்வுஷம் பொறுப்பு கூற வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்