தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.
தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, தேர்தல் சட்டங்களை மீறினார்கள் என, தென் மாகாண முதலமைச்சர் மற்றும் மேலும் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று நீதிமன்றில் எடுக்கப்பட்டது.
முதலமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அதேவேளை, அவரின் பிணையாளிகளுக்கும் அழைப்பாணை அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வா வெளிநாடு சென்றுள்ளமையினால், இன்றைய தினம் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என்று, அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.