அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

🕔 January 28, 2016

Uthumalebbe - 01087
– றியாஸ் ஆதம் –

ட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, பிரதேச மட்டத்தில் க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களை நியமிக்க கோரும் அவசரப் பிரேரணையினை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார். இப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு உதுமாலெப்பை கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கஷ்டப் பிரதேசங்களில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விசேட ஏற்பாடுகளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மத்திய அரசாங்க கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உதுமாலெப்பை இதன்போது வலியுறுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரைாயற்றுகையில்;

விசேட ஏற்பாடுகள் வேண்டும்

“திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், குச்சவெளி மற்றும் ஈச்சிலம் பற்று ஆகிய பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கஷ்டப் பிரதேசங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மற்றும் இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களிலும்  நீண்ட காலமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்து வைப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபையின் அதிகாரமும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும் உங்களிடம்தான் உள்ளது. ஆகையால் இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறான நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள விடயங்களை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக சமர்ப்பிக்கப்படும் நல்ல விடயங்களுக்காக நாம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

தவம் கூறுவது நியாயமில்லை

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டுக்குரிய நிதியிலிருந்து பொத்துவில் கல்வி கோட்டத்துக்கு 31 மில்லியன் ரூபாவும், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு 91 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும அதேவேளை, அக்கரைப்பற்று கல்வி கோட்டத்துக்கு 03 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் உறுப்பினர் ஏ.எல். தவம் இந்த சபையில் தெரிவித்ததோடு, அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர்தான் இந்த தவறை இழைத்ததாகவும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். தவம் இந்த சபையில் குறிப்பிட்டார்.

அதேவேளை, கல்வி அமைச்சின் நிதியை கையாளும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு இருந்த போதிலும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் நிதியினை தவறாக ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும் தவம் குற்றம் சுமத்துகின்றார். ஆனால், இது நியாயமில்லை.

இந்த நிதி ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை யார் மேற்கொண்டது என்பது பற்றி, கல்வி அமைச்சர் கவனிக்க வேண்டும். பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டங்களில் கல்வித் தேவைகள் அதிகமாகவுள்ளன என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக பெருந்தொகை மக்கள் வாழும் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்துக்கு 03 மில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்குவதற்கு தீர்மானம் எடுத்தமையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, கல்வி அமைச்சருக்கும், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இவ்வாறான சமன்பாடு இல்லாத நிதி ஒதுக்கீடுகளினால் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளும், பிரதேச வாதங்களும் உருவாகின்றன. எனவே, இது தொடர்பாக கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

முறையற்ற இடமாற்றங்கள்

கல்வித் துறைக்கு அர்ப்பணிப்புடன் பணி புரியும் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றப்பட்டுள்ளனர். நல்லாட்சி நடை பெறுகின்றது என பேச்சளவில் கூறிக்கொண்டு மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் அர்ப்பணிப்புடன் பணி புரிந்த வலயக் கல்விப் பணிப்பாளர் அகமட்லெவ்வை அரசியல் காரணங்களுக்காக அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பிரதிப் கல்விப் பணிப்பாளராக பதவி குறைக்கப்பட்டு இடமாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக அர்ப்பணிப்புடன் பணி புரிந்தவரை பிரதிக் கல்விப் பணிப்பாளராக தரம் குறைத்து இடமாற்றியது நியாயமில்லை. இதேபோல், அக்கரைப்பற்று வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அ.ஸ. கியாஸ், சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்போது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 04வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளரை இடம்மாற்றுவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்