மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம்
– அஹமட் –
தனக்கு பொதுமகன் ஒவருர் மரியாதை கொடுத்துப் பேசவில்லை எனக்கூறி, அந்தப் பொதுமகனின் கடையின் முன்பாக – பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்கை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்கின்றவர் கழற்றிச் சென்ற சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது.
இது சம்பந்தமாகத் தெரியவருவதாவது;
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்கு ஒன்று – காலை வேளையிலும் ஒளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.
இதன்போது அந்த வழியாகச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்பவர் (இவர் செயலாளர் தரத்தைக் கொண்டவர் அல்ல; எழுதுவினைஞர் தரத்தை உடையவர்), அந்த மின்விளக்கின் முன்பாகவுள்ள கடையொன்றின் உரிமையாளரிடம், குறித்த மின்விளக்கை ஏன் அணைக்கவில்லை என, அதிகார தோரணையுடன் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்தக் கடை உரிமையாளர்; “வழமையாக இந்த மின்விளக்கை நான்தான் அணைப்பேன், இன்று மறந்து விட்டது. ஆனால், இது எனது கடமையல்ல” என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட செயலாளர் எனக் கூறிக் கொள்பவர், தனக்கு மரியாதை கொடுக்காமல் அந்தக் கடைக்காரர் பேசியதாகக் கூறி, பிரதேச சபை ஊழியர்களை அனுப்பி வைத்து, மேற்படி தெரு மின்விளக்கை கழற்றியெடுத்துள்ளார்.
இந்த தெருமின்விளக்கு, பிரதான வீதியோடு இணையும் உப வீதியின் முன்னால் பொருத்தப்பட்டிருந்தது. இப்போது இதனைக் கழற்றிக் கொண்டு சென்று விட்டதால், குறித்த உப வீதியால் இரவு வேளையில் பயணிப்பவர்கள் வெளிச்சமின்றி பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதி, பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி. பதுர்தீனின் வட்டாரத்துக்கு உட்டபட்டதாகும்.
அட்டாளைச்சேனை பிரேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்ளும் மேற்படி நபர் – இவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில், அப்பகுதி மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, தெருவிளக்கு அவரின் வீட்டுச் சொத்தல்ல எனவும் கூறுகின்றனர்.
தொடர்பான செய்தி: அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்