நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

🕔 June 23, 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை கொடுத்து, ஏழைகளுக்கு பசியை இந்த அரசாங்கம் கொடுத்துள்ளது.

நாடு ராணுவமயப்படுத்தலை நோக்கி நகர்கிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

நாடு 100 கோடி டொலர் கடன் செலுத்த இருக்கிறது. இதனை எப்படி செலுத்துவது என்பது அரசாங்கத்துக்கு தெரியவில்லை. அதற்கான திட்டமும் இல்லை.

2019ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு 700 கோடி டொலர் கிடைத்தது. இன்று அது 400 கோடி டொலராக குறைவடைந்துள்ளது.

தற்போது சர்வதேச நாணயம் நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் 78 கோடி டொலர்கள் கிடைக்கும். சார்க் நிதியத்திடமிருந்து 40 கோடி டொலர் கிடைக்கும். பங்காதேஷத்திடமிருந்து 20 கோடி டொலர் கிடைக்கும். எனினும், முழுமையாக கடன் பொறியில் இருந்து மீள முடியாது.

இதிலிருந்து மீள்வதற்கான என்ன வழி இருக்கிறது? ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் நடத்த வேண்டும். இதற்கு இணங்கவில்லை என்றால் என்ன வழி என்று கூறவேண்டும்.

உரம், எரிபொருள், கல்வி ஆகிய பிரச்சினைகள் இன்று பெருமளவில் தலைதூக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அரசாங்கம் மட்டுமல்ல, நாடாளுமன்றமும் இல்லாமல் போகும். கொவிட் தான் இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது.

எனினும், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கொவிட் தடுப்பு விசேட படைப் பிரிவு முழுமையாக தோல்வியடைந்துள்ளது.

எமது அரசியலமைப்பின் ஊடாக அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இதற்கு பொறுப்பு இருக்கிறது. பிரதமரும் இருக்கிறார். அமைச்சர்களும் இருக்கின்றனர். பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்கு பிழைத்தால், நாடாளுமன்றத்தில் அதனை நாம் சுட்டிக்காட்டுவோம்.

ஆனால் ஒரு திணைக்களத்தின் தலைவர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு இருக்கும் தகுதி என்ன? ராணுவத் தளபதியால் இதனை செய்ய முடியாது. எனவே பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும்.

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது. இது பிழையானது. முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றுகிறார். இதனால் வந்த முதலீட்டாளர்களும் சென்றிருப்பார்கள். இது பிழையான முன்னுதாரணம். ராணுவத் தளபதி எனது நண்பர். நானும் அவருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் இதனை ராணுவ மயப்படுத்த முடியாது. இதனை சரிசெய்ய வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்