முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு

🕔 September 28, 2020

மிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம்கள் விவகாரத்தில் இரட்டை முகத்தினைக் காட்டுவதாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினை தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுவதற்கான கருவியாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று ஞாயிறுக்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

“கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல தேசிய அரசியலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அதேநேரம் எமது பிராந்தியத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும், எங்களுடைய அதிகார மையத்தினையும் தக்கவைக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம். அதற்கான வழிவகைகளை எங்களது அரசியல் தலைமைகள் செய்யும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

அதேநேரம் இன்று சம்மாந்துறையில் மறைந்த தலைவரின் நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பேசும்போது, முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சுயநிர்ணய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

அதே சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரினை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று கடந்த வருடம் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு அவர் இரட்டை முகத்தினை கொண்டு செயற்படுகின்ற சூழ்நிலையில், இன்னுமின்னும் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களோடு மோதவிடுவதற்கான கருவியாக முஸ்லிம் சமூகத்தை மாட்டிவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால் தமிழ் சமூகத்தினுடைய போராட்டத்துக்கு வலிமை சேர்க்கின்ற சக்தியாக பெரும் வல்லரசு நாடான இந்தியா இருக்கின்றது. அண்மையில் இந்திய பிரதமர் மோடியினுடைய உரையில் கூட – தமிழ் தலைமைகள் பேசிவரும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக கூறி இருக்கின்றார்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸா எரிக்கப்பட்ட விடயத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகளோ, வல்லரசுகளோ குரல் கொடுக்கவில்லை.

எமது சமூகத்தை மிகவும் நுட்பமாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்மன்றி ஒவ்வொரு சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்