அச்சம்

🕔 October 29, 2019

முகம்மது தம்பி மரைக்கார்

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும்.

வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால் நிறைவேற்றியே ஆக வேண்டும். கடன் அன்பை முறிப்பது போல், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது – பகைமை ஏற்படுகிறது.

“வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்தான்“ என்கிறார் ஓர் அறிஞர். விரும்பிய மட்டும் அதனை அள்ளி வழங்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாதபோது, மற்றவர்கள் முன்பாக ஒரு பிச்சைக்காரனைப்போல் வாக்குறுதியளித்தவர் தலைகுனிந்து நிற்க நேரிடுகிறது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆபத்தானவை, கொடுத்தவரின் கால்களை எதிர்பாராத நேரமொன்றில் அவை – ஒரு கொடிய விஷப் பாம்புபோல் இறுக்கிச் சுற்றிக் கொள்ளும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றோம். ‘மைத்ரீ ஆட்சி, நிலையான நாடு’ எனும் தலைப்பில் அமைந்த அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி, ‘ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம்’ என்பதாகும். அதனுள் குறிப்பிடப்பட்டிருந்த முதலாவது விடயம், ‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றியமைத்தல்’ என்று இருந்தது.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்குரிய நேர்மையான முயற்சிகள் எவையும் நடக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ரணில் கொடுத்த வாக்குறுதி

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதியன்று கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க; “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றினை பெற்றுத்தருவேன்” என்கிற வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தார். அந்தப் பிரசாரக் கூட்டத்தை மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது.

சாய்ந்தமருது மக்கள் – மிக நெடுங்காலமாக தமக்கு உள்ளுராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து, ஜனநாயக வழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக யார் கூறுகின்றார்களோ, அவர்களுக்கே தேர்தலில் தமது பிரதேசம் வாக்களிக்கும் என்று, சாய்ந்தமருது மக்களை தலைமை தாங்கி வழி நடத்தும், பெரிய பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்திருந்தது.

அதனால்தான், சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, ரணில் விக்ரமசிங்க அந்த வாக்குறுதியை வழங்கினார். பிரதமரின் வாக்குறுதியின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. அதனை அந்தக் கட்சியின் தலைவரே பின்னாளில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

மு.கா. தலைவரின் ஒப்புதல்

2018ஆம் ஆண்டு ஓட்டமாவடியில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; “சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவோம் என்று, நாங்கள் எழுதிக் கொடுத்ததைத்தான் பிரதமர் வாசித்தார்“ என்று, பகிரங்கமாக ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படவில்லை. அதனால், அந்த ஊர் மக்கள் ஏமாற்றமும் விசனமும் அடைந்தனர்.  இதனையடுத்து 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில், தமது ஊர் சார்பாக சுயேட்சைக்குழு ஒன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் களமிறக்கியது. முடிவு; அந்தத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைத்து வட்டாரங்களையும், ஊர் சார்பாக களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழுவே கைப்பற்றிக் கொண்டது.

தமது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கி விட்டு, பின்னர் தம்மை ஏமாற்றிய அரசியல் கட்சிகளையும், அரசியல் பிரமுகர்களையும் சாய்ந்தமருது மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். அந்த நிலைவரம் இப்போது ஜனாதிபதி தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்கவின் கட்சி சார்ந்த வேட்பாளரை, அல்லது தமக்கு உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக ரணில் விக்ரமசிங்க ஊடாக வாக்குறுதி வழங்கிய மு.காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளரை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதில்லை எனக்கிற முடிவுக்கு, சாய்ந்தமருது பிரதேச மக்களை வழி நடத்தும் பள்ளிவாசல் நிருவாகம் வந்துள்ளது.

கோட்டாவை ஆதரிக்கும் முடிவு

இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம், தமது பிரதேசத்துக்கான தனியான உள்ளுராட்சி சபை எனும் கோரிக்கையை முன்வைத்துப் பேசியது. அந்தக் கோரி்கையை நிறைவேற்றுவதாக மஹிந்தவும் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதனையடுத்து, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக அந்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிருவாகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; தாங்கள் வெற்றி பெற்றால், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை பகிரங்கமாகவே மக்களுக்கு வழங்கியிருக்கின்றார்.

சாய்ந்தமருதில் சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அந்த வகையில் ஒரு ஊரே கூடி, கோட்டாவுக்கு வாக்களிப்பதென முடிவு செய்திருப்பது சாதாரணமான விடயமில்லை. அதுவும், சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் கோட்டாவுக்கு கிடைக்க மாட்டாது என்று, சஜித் பிரேமதாஸ தரப்பினர் நம்பிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் நிலையில், நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும் சாய்ந்தமருது பிரதேசம், தமது ஆதரவு கோட்டாவுக்கே என அறிவித்திருப்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.

விமர்சனங்கள்

மறுபுறமாக சாய்ந்தமருதின் இந்த நிலைப்பாடு குறித்து விமர்சனங்களும் இல்லாமலில்லை. ஜனாதிபதித் தேர்தலொன்றில் இவ்வாறான முடிவொன்றை சாய்ந்தமருது பகிரங்கமாக எடுத்திருக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். சிலவேளை, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறவில்லை என்றால், அரசியல் ரீதியாக சாய்ந்தமருது பழி தீர்க்கப்படலாம் என்கிற பேச்சும் உள்ளது.  சாய்ந்தமருதுக்கு வாக்குறுதி வழங்கி விட்டு ஏமாற்றியவர்களை ஜனநாயக ரீதியாகத் தண்டிப்பதற்கு பொருத்தமான காலம் பொதுத் தேர்தல்தான் என்கின்றனர் வேறு சிலர்.

இதேவேளை, “சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்துள்ள இந்த முடிவானது, ஒட்டு மொத்த முஸ்லிம்களையும பாதிப்பதாக அமைந்து விடும்“ என்று, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். சாய்ந்தமருதில் தமது கட்சி முக்கியஸ்தர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசிய போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

(மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இது தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை, இந்தக் கட்டுரையின் பெட்டி பகுதியில் வாசகர்கள் விரிவாகக் காணலாம்)

எது எவ்வாறாயினும், தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிய அல்லது நிறைவேற்றாதவர்களை ஜனநாயக வழியில் தண்டிப்பதற்கு சாய்ந்தமருது மக்கள் எடுத்த தீர்மானம் துணிச்சலானதாகும். வாக்குறுதிகளை வழங்கி விட்டு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு, சாய்ந்தமருது மக்கள் எடுத்துள்ள தீர்மானம் நல்லதொரு பாடமாக அமைந்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதனை நிறைவேற்றாமல் விடுகின்ற அரசியல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கலாம் என்பதற்கான முன்னுதாரணத்தையும் ஏனைய பிரதேசத்தவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் காட்டியுள்ளனர்.

வாக்குறுதியின் பெறுமானம்

தாங்கள் வழங்கும் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டாலும், மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசியல்வாதிகள் நம்புகின்றனர். வாக்குறுதி என்பது சூழ்நிலையை தமக்குச் சாதகமாக வென்றெடுப்பதற்கான வெற்று வார்த்தைகள்தான் என, அநேகமான அரசியல்வாதிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், வாக்குறுதியைப் பேணுவதென்பது நபிமார்களின் பண்பு என்று கூறுகிறது இஸ்லாம். “நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான். வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்” என்று முகம்மது நபியவர்கள் கூறியுள்ளாள்கள். வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு இருப்பதில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களும் மோசடிக்காரர்களும் வெவ்வேறானவர்கள் இல்லை.

“சாய்ந்தமருது மக்களுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுத் தருவோம்“ என்கிற வாக்குறுதியை வழங்கி விட்டு, அதனை நிறைவேற்றாதவர்கள் அனைவரும், அந்த மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். தமக்கு துரோகமிழைத்தவர்களை ஜனநாயக வழியில் எப்படித் தண்டிப்பது என்கிற தீர்மானத்தை எடுக்கும் உரிமை, சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

நம்பித் தொலைத்தல்

“குறைந்தளவு வாக்குறுதிகளை கொடுத்தவனுக்கே வோட்டுப் போடுங்கள்; அப்போதுதான் குறைந்தளவு ஏமாறுவீர்கள்” என்றார் அமெரிக்க அறிஞர் ஒருவர். “நிறைவேற்றாத வாக்குறுதியை விடவும், வாக்குறுதியற்ற அன்பளிப்பு மேலானதாகும்” என்கிறது வேறொரு பழமொழி.

தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மக்களும் கவனமாக இருக்க வேண்டும். வேட்பாளர் ஒருவர் வாக்குறுதியை வழங்கும் போது, அதை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பது குறித்து மக்களும் யோசிக்க வேண்டும். அல்லது குறித்த வேட்பாளரிடம் அதுபற்றி கேட்க வேண்டும். உதாரணமாக, தான் ஆட்சிக்கு வந்தால், அரச ஊழியர்களின் சம்பளத்தை 01 லட்சம் ரூபாவுக்கு மேல் உயர்த்துவேன் என்று, வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி வழங்குவாராயின், அதனை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று மக்களும், மக்களுக்கான ஊடகங்களும் வாக்குறுதி வழங்கியவரிடம் கேட்க வேண்டும்.

தமக்கு கிளுகிளுப் பூட்டுகின்ற, அல்லது தம்மைச் சந்தோசப்படுத்துகின்ற வாக்குறுதிகள் தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் போது, கரகோசம் செய்வதும் சந்தோசங்களை வெளிப்படுத்துவதும் மட்டும் புத்திசாலி வாக்காளர்களின் பண்பாக இருக்க முடியாது. வாக்குறுதிகள் வழங்கப்படும் போது, அவற்றினை வழங்குகின்றவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதிலுள்ள சாத்தியங்கள் குறித்து வாக்காளர்கள் ஆராய வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணும் பொருட்டு புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கப் போவதாக, ஆட்சியிலுள்ளோர் சிறுபான்மை மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்ததை, அத்தனை இலகுவில் மறந்து விட முடியாது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையில்லை என, பௌத்த பீடாதிபதிகள் அறிவித்தமையினை அடுத்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால், இது குறித்து இந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

எவ்வாறாயினும் வாக்குறுதியை வழங்கி விட்டு அதனை நிறைவேற்றாத அசியல்வாதிகள் – ஜனநாயக ரீதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்கிற அச்சத்தை சாய்ந்தமருது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அச்சம், தேசம் முழுவதும் பரவ வேண்டும். அது மக்களுக்கு நல்லதாகும

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (29 ஒக்டோபர் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்