குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை; அடுத்த வாரம் அமுலாகும்

🕔 July 5, 2019

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து, அந்தப் பீடத்தின் மாணவர் குழுக்களிடையே, கடந்த செவ்வாய்கிழமை இரவு அடாவடி, சண்டைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களில் 07 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி பெற்று மறுநாள், வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கையிட்ட ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை, கைகலப்பில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதி பெற்ற மாணவர்களில் ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதோடு, ‘புதிது’ வெளியிட்ட செய்தியினையும் அகற்றுமாறு வற்புறுத்தினார்.

இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளிட்ட நிலையிலேயே, குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மமானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் வாரம் அவர்களில் ஆகக் குறைந்தது 07 பேருக்கு கல்வித் தடை விதிக்கப்படுவதோடு, அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கும் தீர்மானத்தினை பல்கலைக்கழக நிருவாகம் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்