தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

🕔 July 4, 2019

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் நேற்று புதன்கிழமை, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

  • ஏ.எல். அப்துல் ரஹ்மான்
  • என்.எம். றஸ்லி
  • எம்.எல். ஆசிக்கான்
  • எம்.என். ஹஸ்னி அஹமட்
  • எம்.என்.எம். மாசின்
  • எம்.எஸ். முனீஸ்
  • எம்.எம்.எம். சுக்ரி

ஆகியோரே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை, தொலைபேசி மூலமாக அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சண்டை குறித்து ‘புதிது’ செய்தித்தளம் நேற்றிரவு செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, ‘புதிது’ செய்தியாசிரியரை தொடர்பு கொண்ட இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவர்; ‘புதிது’ வெளியிட்ட செய்தியை நீக்குமாறு அச்சுறுத்தல் விடுத்தார்.

மேலும், செய்தியில் குறிப்பிடப்பட்டது போல், வைத்தியசாலையில் மாணவர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பொய்யான செய்தியை ‘புதிது’ வெளியிட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்த மாணவர் வாதிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழக நிருவாகத்தினருக்குத் தெரியாமலேயே மேற்படி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

எதிராளியை கைது செய்ய வைப்பதற்காகவும், தாங்கள் கைதாகுவதிலிருந்து தப்பிப்பதற்காகவும் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது போன்று, பல்கலைக்கழக மாணவர்களும் தொடங்கி விட்டார்களோ என்கிற சந்தேகமும் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ளது.

  • பல்கலைக்கழக வளாகத்தினுள் அடாவடி, சண்டையில் ஈடுபட்டமை
  • நிருவாகத்துக்கு தெரியப்படுத்தாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை
  • சம்பவத்தினை அறிக்கையிட்ட ஊடகத்தை மிரட்டியமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்த மாணவர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக நிருவாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்லாமிய பீடம் ஆகியவற்றின் மதிப்புக்கு குந்தகத்தினையும், அங்குள்ள மாணவர்களின் கௌரவத்துக்கு இழுக்கினையும் இவ்வாறான மாணவர்களே ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, கடந்த செவ்வாய்கிழமை இரவு அடாவடி, சண்டையில் ஈடுபட்ட இஸ்லாமிய பீட மாணவர்கள் அனைவரையும், நிருவாகத்தினர் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் இவ்வாறு குழு மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களை, கல்விச் செயற்பாடுகளிலிருந்து நிருவாகத்தினர் இடைநிறுத்தியமை போன்று, இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மேற்படி அடாவடி மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதே நியாயமாகவும் அமையும்.

தொடர்பான செய்திகள்:

01) தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்

02) தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்