மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தும் சபையினால், இம்முறை சிறுபோகம் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஆரம்ப கட்ட அனுமதியினை, விமான மற்றும் விமானபோக்குவரத்து நிறுவனம் வழங்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க மேலும் கூறினார்.
மத்தல விமான நிலையமானது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆயினும், இந்த விமான நிலையம், திறக்கபட்டதிலிருந்து, எவ்விதமான விமானப் போக்குவரத்துகளுமின்றி பாழடைந்து காணப்படுகின்றது.
இந்த விமான நிலையத்தின் நிர்மாணத்துக்காக, சுமார் 210 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் 2800 கோடி ரூபாவுக்கும் மேல்) செலவிடப்பட்டுள்ளது.
மேற்படி நிதியினை, சீன அரசாங்கத்திடமிருந்து வட்டிக் கடன் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.