உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார்.
வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளை மீளப்பெறுவதற்கு உடன்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொழுக்கப்பட்டமை காரணமாக, டிசம்பர் 04ஆம் திகதிவரை, சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதனால், கணிசமான உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.