வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

🕔 November 17, 2016
robbers-084– பாறுக் ஷிஹான் –
கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரையும்,  வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் – வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்த்தன தலைமையில் செயற்பட்ட குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நெடுங்கேணி, செட்டிகுளம், கிளிநொச்சி மற்றும் இளவாலை  ஆகியபகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் உட்பட, கொள்ளையில்  ஈடுபட பயன்படுத்தியதாக  சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி, பல்சர் ரக மோட்டார் சைக்கிள்  மற்றும் கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பல காலமாக கொள்ளை மற்றும் குற்றச்செயல்களில் இக்குழுவினர் ஈடுபட்டதுடன், கூரிய ஆயுதங்களைக் காண்பித்து பொதுமக்களை அச்சுறுத்தி இரவு வேளைகளில் முகத்தை துணியால் கட்டி வீடுகளுக்குள் சென்று, தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் நகைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள  நகைக்கடை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக  பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.robbers-876 robbers-098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்