தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

🕔 May 29, 2016

Hafis Naseer - 0124கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டியமையினை அடுத்து, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த சர்ச்சையை அடுத்து, கிழக்கு முதலமைச்சர் மற்றும் கடற்படை ஆகிய தரப்புக்களிடமிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கம் கோரியிருந்தார்.

இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் கிழக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றில், இந்த சம்பவத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தனது பெயரையும், மாகாண கல்வி அமைச்சர் பெயரையும் நிகழ்ச்சி தொகுப்பாளர் படிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இருந்தாலும், இந்தத் தவறை கவனித்த மாகாண ஆளுநர், தன்னை மேடைக்கு வருமாறு சைகை செய்ததாகவும், அதையடுத்து, தான் மேடையில் ஏற முயன்றபோது, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் தன்னை மேடையில் ஏறவிடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டார்

இந்த அதிகாரியின் நடத்தை மிகவும் மோசமானதாக இருந்ததாக வர்ணித்த முதல்வர், இது தன்னை அதிர்ச்சியுற வைத்ததாகவும், இந்தச் செய்கையை தான் கண்டித்ததாகவும் கூறினார். இந்த அதிகாரிகள் முறையான அதிகாரபூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடாதமை தொடர்பில், அவர் ஆளுநர் மீதும் பழி சுமத்தியுள்ளார்.

தான் அமெரிக்க தூதர் மற்றும் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னால் அவமானப்படுத்தப்பட்டதாய்உணர்ந்ததாகவும் நசீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் முன்னரே, முப்படைகள் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருப்பது, தவறிழைத்த தங்கள் அதிகாரிகளை பாதுகாக்கும் குறுகிய நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது கடுமையான, ஆனால் நியாயமான நடவடிக்கைக்காக, விழாவில் கூடியிருந்த வெளிநாட்டுத் தூதர், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தபட்ட கடற்படை அதிகாரியிடம் – தான்மன்னிப்பு கோர தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்