
பஸ் சாரதிகள் அல்லது நடத்துநர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வழித்தட அனுமதி (route permits) ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பேருந்து உரிமையாளர்களை எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க; “அதிகாரிகள் உரிமையாளர்களை பொறுப்பேற்கச் செய்வார்கள்” என்று கூறினார்.
உரிமையாளர்களுக்கத் தெரியாமல் ஊழியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தலாம் என்கிற கூற்றுக்களையும் அவர் நிராகரித்தார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இந்த விடயங்களை கூறினார்.
“பஸ் உரிமையாளர்களுக்கு, தங்கள் சாரதிகள் அல்லது நடத்தநர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பது அவர்களுக்குத் தெரியும்” என்று அவர் கூறினார், அத்தகைய நடைமுறைகளை அனுமதிக்க வேண்டாம் என்று உரிமையாளர்களை வலியுறுத்தினார். “அவர்கள் அவ்வாறு செய்தால், வழித்தட அனுமதி ரத்து செய்யப்படலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகாத ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம், உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களின் தொழிலை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
வெற்றிடங்களை நிரப்ப கிராமப்புறங்களில் பல திறமையான இளம் சாரதிகள் உள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


