
காஸா பகுதியின் வடக்கே உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்ற பலஸ்தீனியர்கள் மீது, இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால், ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைமுறைப்படுத்துவதில் – இஸ்ரேல் தாமதத்தை ஏற்படுத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு அனுப்புவதற்கான டொனால்ட் ட்ரம்பின் ஆலோசனையை பலஸ்தீன குழுக்கள் கண்டித்துள்ளன.
இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை அனுப்புவதில்லை என, அமெரிக்காவின் முன்னைய அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானத்தை நீக்குவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ஜெனின் நகரத்திலும் அதற்கு அருகிலும் இஸ்ரேலிய படையினர் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வருகின்றனர். இதில் இரண்டு வயது சிறுமி உட்பட குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.



