இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
🕔 November 4, 2024
– எம்.எஸ்.எம். ஸாகிர் –
“ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சலுகை விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படும்” என, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கு இடையிலான சந்திப்பு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் இன்று (04) திங்கட்கிழமை இடம்பெற்ற போது, அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஹஜ் தொடர்பான நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் அமைச்சர் இங்கு அவர்; தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் – அனைத்து மத நம்பிக்கைகளும் அனுமதிக்கப்படும் என்றும், இதில் எந்த தடையும் இல்லை எனவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும், சமூக ஊடகங்களில் வரும் – ஒவ்வொரு அமைப்பின் கருத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கருத்தாகாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் சவூதி அரேபியா அரசினால் இலங்கைக்கு வருடாந்தம் வழங்கப்படும் ஹஜ் கோட்டா விநியோகம் தொடர்பில் இங்கு கவனம் செலுத்திய அமைச்சர், 2004ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சராக இருந்த போது – முஸ்லிம் பெண்களின் பாடசாலைச் சீருடைக்கு ஹிஜாப் தைக்கத் தேவையான துணியை ஒதுக்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான பணிகளைச் செய்திருந்தமையினையும் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில், மத கலாசார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, புத்தசாசன முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், இலங்கை ஹஜ் குழு தலைவர் இப்றாகீம் அன்சார் மற்றும் உறுப்பினர்கள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.