தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

க்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10)  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦ வீடுகள் மற்றும் மலையகத்துக்கு வழங்கிய 10,௦௦௦ வீடுகள் தொடர்பிலும் இங்கு பிரஸ்தாபித்த றிஷாட் பதியுதீன், இதுவரை எந்தவொரு நாடும் இவ்வாறான உதவிகளை செய்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், நெருக்கடியான காலங்களின் போது இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் போன்று, இனியும் உதவ வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், இலங்கை கடல்வளத்தை இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் வகைதொகையின்றி அள்ளிச் செல்வதன் பாதிப்புகள் குறித்தும் தமது கவலையை வெளியிட்டார். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவர – எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இலங்கையின் அனைத்து மாவட்டப் பாடசாலைகளின் மேம்பாட்டுக்காகவும்  இந்தியா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இற்றைவரை 200 மில்லியன் டொலர் வரையிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைய சுட்டிக்காட்டிய றிஷாட், இது தொடர்பில், தமது கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகர், தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இன்னோரன்ன பல உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் பல கோடி ரூபாய்களை இந்தியா செலவிட்டு வருவதாக கூறினார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, செயலாளர் எஸ். சுபைர்தீன் மற்றும் பிரதித் தலைவர் என்.எம். சஹீட் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.