புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

🕔 January 12, 2024

– பாறுக் ஷிஹான் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாதம் 16ஆம் திகதி வரை – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று (12) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் திறக்கப்படுவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக – பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் 16ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று (12) கூடிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினர் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக, எதிர்வரும் 22ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்