சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்
🕔 January 12, 2024
அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.சிஎம். சமீர் மற்றும் சோல் மேட் பிரைவட் லிமிட்டட் (Soul Mate [Pvt] Ltd) நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட முல்லைத்தீவு, புறத்தோட்டம் மற்றும் மீனோடைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு – உழவு இயந்திரத்தில் சமைத்த உணவை எடுத்துச் சென்று ஏற்பாட்டாளர்கள் விநியோகித்தனர்.
அதேபோன்று, வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
சுமார் 500 பேருக்கு இன்றைய தினம் – சமைத்த உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் முஸாதிக் மற்றும் இர்பான் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, சேனையூர் இளைஞர் அமைப்பினர் உணவு சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்றாம் கட்டமாக – வழங்கி வருவதாக அதன் செயற்பாட்டாளர் றிசாத் ஏ காதர் தெரிவித்தார்.