“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

🕔 October 16, 2023

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக இம்மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் நேரடியான கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்துக்கு உள்ளே அழைக்கப்பட்டனர்.

இவ்வருடம் கலை கலாசார பீடத்தின் முதலாம் வருடத்துக்கு 400 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்கள் பற்றியும் கலை கலாசார பீடத்தில் காணப்படுகின்ற எட்டு கல்வித்துறைகள், அங்கு வழங்கப்படுகின்ற பொது மற்றும் சிறப்பு கற்கைநெறிகள், பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகள், உட்கட்டுமான வசதிகள், மனித வளங்கள், ஏனைய கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் பீடாதிபதி எடுத்துரைத்தார். இதன்போது, கலை கலாசார பீடத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை உட்பட அங்கு வழங்கப்படுகின்ற டிப்ளோமா, சான்றிதழ் கற்கைநெறிகள் மற்றும் ஏனைய பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்து – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் விளக்கமளித்தார்.

இங்கு அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் உரையாற்றுகையில்; பல்கலைக்கழக மாணவப் பருவத்தை தனியே கல்வி நடவடிக்கைகளுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது பிரத்தியேக செயற்பாடுகளையும் உள்வாங்கி, திறமை மற்றும் ஆளுமைகளை விருத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொழிற்சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இங்கு உரையாற்றுகையில், இன்றைய தொழிற்சந்தைக்கு ஏற்றாற் போல் கல்வி நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பதற்கிணங்க, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டினார்.

“தனியே கல்வியுடன் நிறுத்தி விடாது, திறமையை வளர்ப்பதன் மூலமே தொழிற்சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்க முடியும். இதற்கு இப்பல்கலைக்கழகமும் கலை கலாசார பீடமும் பங்களிப்பு வழங்கும். அத்துடன் உலக வங்கியின் நிதி உதவியினூடாக கலை கலாசார பீடம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் நவீன சாதனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துங்கள்” என, உபவேந்தர் வலிறுத்தினார்.

மொழிகள் துறையின் மூத்த பேராசிரியரான றமீஸ் அப்துல்லா பேசுகையில்; இப்பல்கலைக்கழகம் மிகச்சிறந்த ஒரு நூலகத்தை கொண்டிருப்பதுடன் கலை கலாசார பீடத்தின் துறைகளும் தனித்தனியான நூலகங்களை கொண்டிருப்பதையும் இங்கு குறிப்பிட்டார். அவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் ஊடாக மாணவர்கள் பயன்களை பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்.

சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். அய்யூப்,  சமூக விஞ்ஞானத் துறையின் தலைவர் பேராசியர் ஏ.எல்.எம். றியால் உட்பட பேரசியர்கள், விரிவுரையாளர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்