நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல்

🕔 October 16, 2023

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக ‘விடியல்’ இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே – குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராச்சியின் ஊடாக, இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனு (Special Determination) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும், மக்கள் தீர்பளிப்பின் மூலமூமே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தினை, கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல். பீரிஸ், ரஞ்சித் மதும பண்டார, ஊடகவியலாளர்களான லசந்த ருகுணுகே மற்றும் தரிந்து உடுவரஹே உள்ளிட்ட பலர் – நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்