“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

🕔 February 22, 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

“தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம்.

இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் கிவ் ஆர் ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு எந்த எரிபொருள் உதவியையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவோ முடியாது” என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கான கிவ் ஆர் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்க வேண்டுமானால் – அத்தியாவசிய சேவைகள், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகையை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அணுகிய போதிலும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், போதிய எரிபொருள் விநியோகம் இன்மை உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி, எதிர்வரும் மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று, தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற ராணுவ கேர்ணல் டபிள்யு.எம்.ஆர். விஜேசுதந்தர தாக்கல் செய்துள்ள மனு – நாளைய தினம் உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்