றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 May 17, 2021

யங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார்.

றிசாட் பதியுதீன் மட்டுமல்ல, வேறு எவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கத்திருக்கும்போது, விசாரணைகள் நிறைவடையும் வரையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், அவருக்கு வெளியே செல்ல ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனெனில், அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியே செல்லும்போது, விசாரணைகளில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்பில், அவரினால் வெளியாட்களுக்கு அறியப்படுத்த முடியும். இதன் காரணமாக, எதிர்காலத்தில் கைதுசெய்யப்படவுள்ளவர்கள், நாட்டிலிருந்து வெளியேற முடியும். அல்லது கேள்விகளுக்கு அவசியமான பதில்களை தயார்ப்படுத்த முடியும்.

எனவேதான், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெளியே செல்வதற்கு தாங்கள் ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்குவதில்லை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆகையினால்தான், விசாரணைகள் நிறைவடையும் வரையில், நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என சபாநாயகரிடம் தாம் கோரியதாக அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

எவ்வாறிருப்பினும், றிசாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்து வருமாறு சபாநாயகர் தற்போது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

“இந்த நிலையில், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் என்ற அடிப்படையில், சபாநாயகரின் உத்தரவுக்கு நாங்கள் கீழ்படிய வேண்டும்”.

“இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் நாளைய தினம் நாடாளுமன்றுக்கு சமூகமளிப்பார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்