கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு

🕔 May 17, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை 18ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளார்.

அத்துடன், நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 19ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.30 மணிவரையும், 20ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் நடத்தப்படவுள்ளது.

மே 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

நாளை 18ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, நிதிச் சட்டத்தின் கீழான 02 கட்டளைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 08 கட்டளைகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான 02 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை முற்பகல் 10 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்பமானதும் முற்பகல் 11 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் நாளை பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்