கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

🕔 December 23, 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர் மரணமடைந்த நிலையில், அவரின் உடலை தகனம் செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி, சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தவர்கள் காலி நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

அதற்கிணங்க, கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், குறித்த நபரின் உடலை தகனம் செய்ய வேண்டாம் என்றும், அதுவரை அந்த உடலை காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாத்து வைக்குமாறும் நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அகற்றுவது தொடர்பான அரசாங்க சுற்றறிக்கைக்கு அமையாக, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் மேற்படி உடலை தகனம் செய்யுமாறு, காலி பொலிஸாருக்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தண அறிவுறுத்தியுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்