தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல்
விஷம் கலக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டமையனால் கடுமையாக நோய்வாய் பட்டிருந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்யில் வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த உணவை சாப்பிட நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ”இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன்” என்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; அண்மையில் டுபாய், மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக குறிப்பிட்டார்.
தான் ஜப்பானில் இருந்த போது, ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக சுகவீனமுற்றிருந்ததாகவும், ஜப்பான் மற்றும் இலங்கை வைத்தியர்களினால் வழங்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக நல்ல உடல்நிலைக்குத் திரும்பியதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஆட்சியைப் பிடித்து வைத்திருக்கும் நரகவாசிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை வந்துள்ளதாகவும் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்கவை, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் நொவம்பர் மாதம் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.