விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது
மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள முன்னாள் மேயரின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறைகள் வாடகைக்கு விடப்படும் என்ற பெயரில், முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் வைத்து இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் மற்றும் அவருடைய கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கும் விடுதி என்ற பெயரில் மட்டக்களப்பு நகரில் விபச்சாரங்கள் நடைபெற்று வருவதாக, அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் நடைபெறும் விபச்சார நடவடிக்கைகள் தொடர்பில், கடுமையான நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா பணிப்புரைகள் வழங்கியிருந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் மட்டக்களப்பு மாநகரசபை மேயராக 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.