மனித உரிமை ஆணையாளரின் வருகை, மிகப் பெரியதொரு நகைச்சுவை: கோட்டா விசனம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகையானது மிகப் பெரியதொரு நகைச்சுவையாகும் என்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்யட் ராஅத் அல் ஹூசைன், கடந்த வெள்ளிக்கிழமை நான்கு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
இந்தப் பயணம் குறித்து பேசுகையிலேயே, மேற்கண்டவாறு கோட்டா தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்;
“அரச படைகளால் 2009 ஆம் ஆண்டு நசுக்கப்பட்ட பயங்கரவாதிகளின் அனுதாபிகளைத்தான் மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
ஒரு சில நாட்களைக் கொண்ட விஜயத்தில், இங்குள்ள நிலைவரங்களை மனித உரிமைகள் ஆணையாளரால் அறிந்து கொள்ள முடியாது. மட்டுமன்றி ஒரு பக்கத் தரப்பினரை மட்டுமே அவர் சந்திக்கின்றார்.
இவரின் வருகையானது மிகப் பெரியதொரு நகைச்சுவையாகும்” என்றார்.