நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

🕔 March 17, 2023

– பாறுக் ஷிஹான் –

நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நேற்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து, அப்பிரதேச வாசிகள் தனக்கு மகஜர் ஒன்றை கையளித்ததாகவும், குறித்த கடலரிப்புக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியதாகவும் தெரிவித்து, தவிசாளர் பிரேரனையொன்றை முன் வைத்தார்.

இதற்காக ஒலுவில் துறைமுகத்திலுள்ள பாறாங்கற்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு – பிரதேச சபையினால் 500,000/- ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு – சபை உறுப்பினர்களின் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சபை அமர்வானது இறுதி அமர்வு என்பதால் சபை உறுப்பினர்கள் பிரியாவிடை உரைகளையும் நிகழ்த்தினர்.

இதன்போது, கடந்த காலங்களில் தவிசாளரின் வழிகாட்டலில் இச்சபை சிறப்பாக வழிநடத்தப்பட்டு, அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமையை சகல உறுப்பினர்களும் மேற்கோள் காட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய தவிசாளர்;

“இந்த சபையினுடைய செயற்பாடுகள் அனைத்தும் ஊரின் நன்மை கருதியே அமைந்திருந்தது. எந்தவொரு கட்சியை பிரதிபலிக்கும் செயற்பாடுகளாகவோ அல்லது கட்சியின் ஆதரவாளர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாகவோ அமைந்திருக்கவில்லை.

ஊரின் நலனில் அக்கறை கொண்டு – மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்களினாலேயே, நிந்தவூர் பிரதேச சபை முதல் நிலை வகிக்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்