திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை

🕔 March 17, 2023

– சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் –

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதாவை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில், ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இன்று (17) அச்சம்பவம் தொடர்பில் மேலும் 02 வழக்குகள் திருகோணமலை பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

அதிபரை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாக ஒரு வழக்கும் ஆசிரியை பஹ்மிதா சம்பவ தினத்தன்று தாக்கப்பட்டமை சம்பந்தமாக இன்னொரு வழக்கும்  கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆசிரியை பஹ்மிதா சார்பாக குரல்கள் இயக்க (Voices Movement) சட்டத்தரணிகள் ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் எம்.எம்.ஏ. சுபாயிர் ஆகியோர் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜராகி வாதாடினர்.

இதன்போது பஹ்மிதாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் ஆசிரியை பஹ்மிதா – அதிபரை ஒரு போதும் தாக்கயிருக்கவில்லை என்றும் கூறி சட்டத்தரணிகள் கூறினர்.

மேலும், ஏற்கனவே நிலுவையில் இருக்கின்ற வழக்கினை தடுக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டிருப்பதாகவும், இதைனை வழக்கு விளக்கத்தின் போது தம்மால் இலகுவில் நிரூபிக்க முடியும் எனவும் தமது பஹ்மிதாவின் சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை செய்திருந்தனர்.

அதேபோன்று மற்றைய வழக்கிலும் ஆசிரியை சார்பான வாதங்களை சட்டத்தரணிகள் முன்வைத்திருந்தனர்.

எதிர்தரப்பு சட்டத்தரணிகளும் தமது பக்க வாதங்களை முன்வைத்து சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியை பஹ்மிதா சார்பானவர் என்று கூறிக்கொண்டு  இன்னுமொரு கனிஷ்ட சட்டத்தரணியொருவர் சடுதியாக மன்றில்ஆஜராகி, இவ்வழக்கு  செல்வாக்குக்கு உட்பட்டு இம்மன்றில் நடத்தப்படுகின்றது என்றொரு வாதத்தை முன்வைத்தார்.

அதன்போது குறித்த சட்டத்தரணியினை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அவரின் செயற்பாடு தொடர்பில் தனது அதிருப்தியினையும் வெளியிட்டது.

இதன்போது குறித்த சட்டத்தரணியின் சமர்ப்பணத்துக்கும் ஆசிரியை பஹ்மிதாவின் உத்தியோகபூர்வ சட்டத்தரணிகளான தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தையும் கவனமாக செவிமடுத்த நீதிமன்றம், பிணக்கின் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு – சமாதானம் ஒன்றுக்கு வருவதற்கான வாய்ப்புக்களையும் சாதகமாக பரீசிலிக்குமாறு இரு தரப்பனரையும் வேண்டிக் கொண்டது.

இதனையடுத்து குறித்த வழக்கில் பிணையினையும் வழங்கி, வழக்குகளையும் விளக்கத்துக்காக மே 25ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது,

குரல்கள் இயக்கம் ஆசிரியை பஹ்மிதா றமீஸின் கலாசார உரிமை மீட்புக்காக – ஆரம்பம் தொடக்கம் சட்ட ரீதியாகப் போராடிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் எம்.எம்.ஏ. சுபாயிர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்