தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்
– க. கிஷாந்தன் –
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று தைப்பொங்கல் தினம் இரவு மேற்படி விபத்து இடம்பெற்றது.
பட்டல்கலை தோட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கு சென்ற 08 வயது சிறுவனும் அவரின் சகோதரனும் பட்டல்கலை பிரதான வீதியில் வைத்து, வேக கட்டுப்பாட்டை மீறிய முச்சக்கரவண்டியினால் மோதுண்டனர்.
இதில் படுங்காயமடைந்த சகோதரர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆயினும், குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையினால், அவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு உடனடி மாற்றம் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆயினும், அங்கு சிகிச்சை பலனின்றி 08 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவனின் சகோதரர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.