காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

🕔 December 27, 2021

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே – தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணியின் கருத்து சேகரிக்கும் நடவடிக்கை, கண்டி மாவட்டச் செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற போதே, மேற்பபடி நபர் அங்கு வருகை தந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தனிப்பட்ட ரீதியில் தனது கருத்துக்களை முன்வைப்பதற்காகவே தான் இங்கு வந்ததாகத் தெரிவித்த சுபைர், நீதிமன்றத் துறையில் தனது 40 வருடகாலச் சேவையின் போது கண்ட வருந்தத்தக்க அனுபவங்களை நினைவிற்கொண்டே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறினார்.

பல்வேறு தன்னார்வ அமைப்புகள், வெவ்வேறு இனக் குழுக்கள், தொழிற்றுறையினர் அமைப்புகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்களும் இங்கு வருகை தந்து, செயலணி முன்னால் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனர்.

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் பலதார மணம் போன்றே, மதத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அமைப்புகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், ஜனாதிபதிச் செயலணியின் முன் சுபைர் சுட்டிக்காட்டினார்.

காதி நீதிமன்றங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீதிபதியல்லாத காதி ஒருவர் முன்னிலையிலேயே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அந்தக் காதியினால், சட்டத்துக்கு உட்பட்ட ஆவணங்கள் மற்றும் அவ்வாறல்லாத ஆவணங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டுள்ளன. அதனால், சரியான புரிதலுடனும் பாரபட்சமின்றியும் சரியான தீர்ப்பை வழங்க முடியாத சந்தர்ப்பங்களைப் போன்றே, நீதிமன்றத் தீர்ப்புகள் அமுலாக்கப்படாத பல சந்தப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

அதனால் இந்த நீதிமன்ற முறைமையை இல்லாதொழிப்பதால், பராமரிப்பு வழக்குகளின் போது – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பெற்றோருக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதென்றும், மொஹமட் சுபைர் எடுத்துரைத்தார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மூலம் சக்திவாய்ந்த சமூக மற்றும் சட்ட அநீதிகள் நடைபெறுகின்றன என்றும் எடுத்துக்காட்டிய சுபைர், தற்போது காதி நீதிமன்றங்களுக்கு வரும் பராமரிப்பு வழக்குகளை, நீதவான் நீதிமன்றங்கள் ஊடாகவும் விவாகரத்துக்கான மாவட்ட நீதிமன்றங்கள் ஊடாகவும், நியாயமாகவும் பாரபட்சமின்றியும் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது பலதார மணம் செய்வதற்கான அனுமதியையும் இல்லாதொழிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட சுபைர், அதற்கான காரணங்களைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விளக்கினார்.

மதம் பிரிக்கப்படக் கூடாது என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சுபைர், அதற்கான வாய்ப்புகளை அனுமதிப்பதானது, பல்வேறு தீவிரவாத அமைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்