ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்

🕔 December 19, 2021

க. கிஷாந்தன்

‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார்.

“தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார்.

நுவரெலியாவில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“ஒமிக்ரோன் பிறழ்வே உலகுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் நாளாந்தம் 70 பேர்வரை ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதுவரை நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரோன் உறுதியாகியுள்ளது. அவர் டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். 11 ஆம் திகதிவரை இருந்துள்ளார். டிசம்பர் 09, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பில் கசினோ விளையாடியுள்ளார்.  

கசினோ நிலையத்துக்கு வந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு செயற்பட்டால் எப்படி ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுக்க முடியும்?

அவர் வந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்துக்குள் தீர்வையற்றக் கடைகளில் இருந்தவர்கள் என பலரும் அவரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இவை தொடர்பில் – உரிய வகையில் தேடுதல் நடத்தாவிட்டால் எப்படி நிலைமையைக் கட்டுப்படுத்துவது? இது சுகாதார அமைச்சுக்கு விளங்காதது ஏன்?  

இலங்கையில்  விமான நிலையம் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நைஜீரியாவுக்கு சென்றுவந்த நிலையில், ஒமிக்ரோன் தொற்றிய தனியார் பல்கலைக்கழக பேராசிரியர், ஒரு தடுப்பூசி கூட பெறவில்லை. அவ்வாறு பெறாதவர் எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும்? சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதில்ல.

வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாப்பயணிகள், அரசியல் பலம்மிக்க சுற்றுலா ஏஜன்ட்களால் – தமக்கு தேவையான ஹேட்டல்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.

எமது நாடு ஒரு தீவு. இங்கு வைரஸ் பரவுவதை தடுக்கலாம். 02ஆவது அலைகூட தவறான அரசியல் தீர்மானத்தால்தான் ஏற்பட்டது. தற்போது பி.சி.ஆர் பரிசோதனை உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதில்லை. உண்மையான தரவுகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எவ்வித திட்டமிடல்களும் இன்றி, போலியான தகவல்களை மையப்படுத்தியே தற்போதயை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன” என்றார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்