அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார்.
இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 01ஆம் திகதி உலக எயிட்ஸ் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. 1981 ஆண்டு – முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று வரை 36 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர்.
37 மில்லியன் மக்கள் இன்று வரை எயிட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையை பொறுத்தமட்டில் 2600 பேர் எயிட்ஸ் நோய்க்காக சிகிச்கை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றும் இலங்கையில் 1000 எயிட்ஸ் நோயாளிகள் எம்மிடையே மறைந்து வாழ்கின்றனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர். கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் நோய் – ஒருவரின் நிர்பீடண சக்தியை (immunity) இல்லாதொழிக்கின்றது.
எயிட்ஸ் நோய் 03 வழிகளில் பிரதானமாக பரவல் அடைகின்றது. அதாவது பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடு ,தாய் தந்தையினுடாக பிள்ளைக்கு கடத்தப்படுதல் மற்றும் பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் ரத்தமாதிரிகளின் ஊடாகவும் பரவுகின்றன.
இலங்கையில் பாதுகாப்பற்ற முறையில் ஆண் – ஆணுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், 40 வீதத்துக்கு அதிகமாக எயிட்ஸ் அதிகரித்து செல்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.