20 நாள் குழந்தையை தகனம் செய்தமை தொடர்பான உரிமை மீறல் மனு: விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவிப்பு

🕔 January 22, 2021

கொரோவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 20 நாட்களையுடைய குழந்தையை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைகளிலிருந்து த விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். நவாஸ் இன்று நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார்.

குறித்த பிள்ளையின் பெற்றோர்களான கொழும்பில் வசிக்கும் எம்.எப்.எம். பாஹிம், என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் குழந்தையின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, தங்களுடைய குழந்தையின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை விசாரணைக்கு உட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, எல்.ரி.பி. தெஹிதெனிய, யசந்த கோத்தாகொட மற்றும் ஏ.எச்.எம். நவாஸ் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொவிட் தொற்றால் உயிரிழப்போர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர்களின் அடிப்படை உரிமை மனு குறித்து அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பிப்பதாக பிரதிவாதிகள் தரப்பு மன்றுக்கு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே இந்த அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.

அடிப்படை ஆட்சேபனைகளை இன்று முதல் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்