குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்
பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்துவந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் இதுவரை விற்பனை செய்துள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் இந்த மோசடி வியாபாரம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துஷ்பிரயோகம் மற்றும் வேறு காரணங்களால் கர்ப்பமடைந்த பெண்களை இணையத்தள விளம்பரங்கள் ஊடாக தொடர்பு கொண்டு சந்தித்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து – பிரசவிக்கும் குழந்தைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையினை அடுத்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இந்த மோசடியை ‘பேபி பார்ம்’´ என குறிப்பிடுவதாகவும் இதனுடன் தொடர்புடைய 12 கர்ப்பிணி பெண்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.