முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு

🕔 October 20, 2020

நாடாளுமன்ற சபை அமர்வின் போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக் காட்டி னார்.

இன்று 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைக் கூறினார்.

கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது, சமூக இடைவெளி காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“இது சட்டத்தை மீறியுள்ள செயற்பாடாகும். சபாநாயகர் கூட முகக்கவசம் அணிந்து வரவில்லை. எனவே, அவரும் இந்தச் சட்டத்தை மீறியுள்ளார்.

சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திலேயே இந்த நிலைமை இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் சஜீத் கூறினார்.

எனவே, சுகாதார ஆலோசனைக்கு இணங்க நாடாளுமன்ற ஆசனங்களை ஒழுங்குபடுத்தி, பின்னர் நாடாளுமன்ற அமர்வை கூடுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்