ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள்
ஆடையின்றி கலஹகல ஆற்றில் குளித்த பொலநறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைப் பிடித்த அப்பிரதேச மக்கள் – அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பொலன்நறுவை – கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் ஆடையின்றி மேற்படி அதிகாரிகள் குளித்துக் கொண்டிருந்தமையைக் கண்ட அப்பிரதேச மக்கள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரியவருகிறது.
இதனால், குறித்த அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி 07 அதிகாரிகளையும் பொதுமக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளர்.
இச்சம்பவத்தை அடுத்து தேர்தல் முறைப்பாட்டு பிரிவில் கடமையாற்றிய மேற்படி அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டி.ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் குறித்தபோது மதுபானம் அருந்தி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் ஆடையின்றி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது, கிராமவாசிகள் சிலர் வந்து அவர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டதால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கிராமவாசிகள் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி கூறியுள்ளார்.
இந்த 07 அதிகாரிகளில் ஒருவர், கிராமவாசிகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலன்நறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.